
பத்து பஹாட், ஆகஸ்ட் 20 – பத்து பஹாட்டில், 17 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை TikTok மூலம் இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 வயதுடைய இரு மாணவர்கள், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஜூலை 25ஆம் தேதி, ரெங்கிட் அருகே உள்ள கம்போங் பாரிட் லாப்பிஸ் ஸ்ரீ லாடாங் (Kampung Parit Lapis Sri Ladang, Rengit) பகுதியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் TikTok காணொளியில் அவமதிக்கும் கருத்துகளை பதிவிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருவரும், பெண்ணின் இடது கை பெருவிரலில் உள்ள குறைபாட்டை அறிந்த பின்னர், அவரை ஆன்லைனில் கேலி செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளியிலும் அவரை தொடர்ந்து கேலி செய்ததாக கூறப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் இருவருக்கும் தலா 1,000 ரிங்கிட் பிணை வழங்கி, வழக்கை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.



