Latestமலேசியா

தப்பியோடிய மூவரை 25 கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்ற போலீஸ்; காரில் போதைப்பொருள் & வெடிப்பொருள் கண்டெடுப்பு

செர்டாங், ஜூன்-12 – சிலாங்கூர் செர்டாங்கில் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பித்து ஓடிய மூவரை காஜாங் வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீஸ் துரத்திச் சென்றதில், அக்கும்பலின் கார் தடம்புரண்டது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீ கெம்பாங்கான் நோக்கிச் செல்லும் ஜாலான் புத்ரா பெர்மாயில் ரோந்து போலீஸார் snap check சோதனையிலிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

ஆடவர்கள் பயணித்த Honda Civic காரை நிறுத்தச் சொன்ன போது, கேட்காமல் ஸ்ரீ கெம்பாங்கான் நோக்கி அது ‘பறந்தது’.

போலீஸாரும் விடாமல் காஜாங் சில்க் நெடுஞ்சாலைக்குள் நுழையும் ஜாலான் சுவாகாசே சாலை சந்திப்பு வரை துரத்திச் சென்றனர்.

அப்போது சந்தேக நபர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதி, நடு சாலையில் குப்புறக் கவிழ்ந்தது.

அதில் காயமடைந்த 40 முதல் 51 வயதிலான அந்த உள்ளூர் ஆடவர்கள், சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவருக்கு போதைப்பொருள் குற்றம் உட்பட 46 குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

மற்றொருவரும் போதைப்பொருள் குற்றங்கள் தொடபில் தேடப்பட்டு வந்தவராவார்.

அவர்களின் காரை சோதனையிட்டதில் கஞ்சா, கொக்கேய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அதோடு, இரும்பு கூறுகள் மற்றும் திருகுகள் அடங்கிய பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட ஒரு சாம்பல் நிறப் பொருளும், ஒரு கம்பி சுருளும், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் என நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் பேட்டரியும் கண்டுபிடிக்கப்பட்டன.

அம்மூவரும் மேல் விசாரணைக்காக காஜாங் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!