ஈப்போ, மே-27, பேராக் மாநில மஇகா முன்னாள் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான தான் ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் பெரிய இழப்பாகும் என, மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
“என்னுடைய அரசியல் பயணத்தில் எல்லாக் காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர் தான்ஸ்ரீ ஜி.ராஜூ என்பதை என்றும் நான் நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, மாநில செயலாளராகவும் பின்னர் மாநிலத் தலைவராகவும் சிறந்த சேவைகளை வழங்கியவர் தான்ஸ்ரீ ஜி.ராஜூ.
1990 முதல் 2008 வரை பேராக் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினராகவும், அதே காலகட்டத்தில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து மாநில மக்களுக்கு அவர் சிறந்த சேவையாற்றியுள்ளார்.
தன் பதவிக் காலத்தில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதிக்கும் பேராக் மாநில இந்திய சமூகத்திற்கும், பேராக் மாநில மஇகாவின் வளர்ச்சிக்கும் ராஜூ ஆற்றிய சேவை அளப்பரியது.
தான் ஸ்ரீ ராஜூவின் சேவைகள் என்றும் மஇகாவினரால் நினைவுக் கூறப்படும்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
செனட்டராகவும் பதவி வகித்திருக்கும் தான் ஸ்ரீ ராஜூ, மறைந்த துன் சாமிவேலு காலத்தில் பேராக் மாநிலத்தில் அசைக்க முடியாத மஇகா தலைவராக வலம் வந்தவர் ஆவார்.