
கோத்தா பாரு, ஆகஸ்ட்.19-தாய்லாந்திற்குள் நுழையும் மலேசிய வாகனமோட்டிகள் அந்நாட்டின் சட்ட விதிமுறைகளை மதித்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என நினைவுறுத்தப்படுகிறது. மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே, குறிப்பாக வாகனங்களில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளில் வேறுபாடுகள் இருப்பதால், வாகனமோட்டிகள் அந்நாட்டின் விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் என கிளந்தான் காவல் துறைத் தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
உதாரணத்திற்கு, மோட்டார் சைக்கிள்களில் செய்யப்படும் மாற்றங்கள் மலேசியாவில் அனுமதிக்கப்படலாம். ஆனால் தாய்லாந்தில் அவை தடை செய்யப்பட்டிருக்கலாம். எனவே சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க அந்நாட்டிற்குள் நுழையும் முன் அதன் சட்டங்களைப் புரிந்து கொள்வது மிக முக்கியம். அதோடு காப்புறுதி பாதுகாப்பு போன்ற பிற விஷயங்களையும் வாகனமோட்டிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, தாய்லாந்தின் Hat Yai நகருக்குக் குழுவாகச் சென்ற 17 மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மொத்தம் 15,000 பாட் (சுமார் 1,850 ரிங்கிட்) மதிப்பிலான 15 சம்மன்கள் வெளியிடப்பட்டன. அதிகம் ஒளிரும் விளக்குகள் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் எக்ஸாஸ்ட் அமைப்புகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பிற போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவர்களுக்கு அச்சம்மன்கள் வெளியிடப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.



