
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL, தித்திவாங்சா (Titiwangsa) ஏரிப்பூங்காவைச் சுற்றியுள்ள ஜாலான் தெம்பிலிங் (Jalan Tembeling) பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மிதிவண்டி வாடகை தொழிலுக்கு எதிராக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், 323 பல்வேறு வகையான மிதிவண்டிகளை பறிமுதல் செய்துள்ளது.
ஜூலை 23 அன்று நடைபெற்ற இந்த நடவடிக்கை, உரிமமின்றி வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட மிதிவண்டி வாடகை தொழில்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மிதிவண்டிகள் மற்றும் வாடகை உபகரணங்கள் பொதுப் பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் கைவிடப்பட்டிருந்ததால், பொதுமக்களுக்கு இடையூறும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பும் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும், பயன்படுத்த முடியாத மற்றும் பழுதடைந்த மிதிவண்டிகள் திறந்தவெளிப் பகுதிகள், வணிக வளாகங்களின் பின்புறம் மற்றும் பொதுக் கழிப்பறைகள் அருகே கைவிடப்பட்டிருந்ததும் DBKL கண்டறிந்தது.
ஐந்து மிதிவண்டி வாடகை தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், 323 மிதிவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு DBKL பறிமுதல் களஞ்சியத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்த நடவடிக்கை, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச தெருவோர வியாபாரிகள் உரிமம் வழங்கும் துணைச் சட்டம் மற்றும் சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக DBKL தெரிவித்துள்ளது.



