
கோலாலம்பூர், மே 23- தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் ( Tengku Maimun Tuan Mat,) பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான தெங்கு மைமுன், கட்டாய ஓய்வு வயதான
66 ஐ எட்டியவுடன் ஜூன் 30 ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளார்.
தெங்கு மைமுனின் பதவி நீட்டிக்கப்படுமா என்று கேட்டபோது, நாங்கள் அதனை பரிசீலித்து வருகிறோம் என அன்வார் சுருக்கமாக பதில் அளித்தார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஹில்டன் கோலாலம்பூரில் Hadiah Bahasa 2025 ஐ மீண்டும் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அன்வார் இந்த தகவலை வெளியிட்டார்.
தெங்கு மைமுன், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் ( Abang Iskandar Abang Hashim ) மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் ( Nallini Padmanathan ) ஆகியோருடன் சேர்ந்து, தங்கள் பதவிக்கால நீட்டிப்புக்காக இன்னும் காத்திருப்பதாகக் துங்கு மைமுன் கூறியதாக செவ்வாய்க்கிழமையன்று தகவல் வெளியானது. கட்டாய ஓய்வு வயதை எட்டிய அபாங் இஸ்கந்தர் ஜூலை 1 ஆம் தேதியும், நளினி பத்மநாதன் ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் ஓய்வு பெறவிருக்கின்றனர்.