
புத்ராஜெயா, ஆகஸ்ட்-6, தேசியத் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 ரிங்கிட் SARA உதவித்தொகை வழங்கப்படும் என இணையத்தில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது.
நிதியமைச்சு, அறிக்கை வாயிலாக அதனைத் தெளிவுப்படுத்தியது.
இவ்வாண்டு தேசியத் தினத்தை முன்னிட்டு, அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் SARA திட்டத்தின் கீழ் ஒரு தடவையாக 100 ரிங்கிட் வழங்கப்படும் என விளம்பரப் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சு, அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனக் கூறியது.
எனவே, பொது மக்கள் இதுபோன்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அவற்றை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் MoF கேட்டுக்கொண்டது.
அத்துடன், தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க, நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக மட்டுமே அதிகாரப்பூர்வத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



