
பத்து காஜா, பிப்ரவரி 27-தெருநாயை பட்டாசு எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் 64 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி மாலை சுமார் 7.30 மணியளவில், பூசிங் (Pusing) பகுதியில் உள்ள தாமான் பூசிங் பாரு (Taman Pusing Baru), ஜாலான் செரோஜாவில் அவர் பட்டாசை எறிந்ததில் தெருநாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அருகிலிருந்தவர்கள் பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். மறுநாள் பெறப்பட்ட CCTV காட்சிகளில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாயின் மீது பொருள் ஒன்றை எறிவது பதிவாகியிருந்தது.
பின்னர் கடை ஊழியர் ஒருவர் நாயின் உடலை புதைத்ததுடன், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் ஜனவரி 30ஆம் தேதி சந்தேகநபரை கைது செய்தனர். விசாரணையின் போது அவரது இல்லத்தில் இருந்து லைட்டர் மற்றும் பல வண்ணங்களில் உள்ள ஆறு பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.
குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



