
சௌஜானா புத்ரா, ஏப்ரல்-26-சிலாங்கூர், குவாலா லங்காட்டில் உள்ள பண்டார் சௌஜானா புத்ராவில் புதிய ம.இ.கா கிளை மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு, கிளைச் செயல்பாடுகளுக்காக 5,000 ரிங்கிட் நன்கொடையையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் 2025 எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற 3 மாணவர்களுக்குத் விக்னேஸ்வரன் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் சமூக முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய விக்னேஸ்வரன், விழாவுக்கு முயற்சி எடுத்தமைக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு, இளைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்…
இவ்வேளையில் பண்டார் சௌஜானா ம.இ.கா கிளைத் தலைவர் குமரன் சுப்பிரமணியன், இந்த மக்கள் சேவை மையம் வழங்கும் உதவிகள் குறித்து பகிர்ந்துகொண்டதோடு, எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார்…
சிலாங்கூர் ம.இ.கா செயலாளர் எம். சசிதரனோ, நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் ம.இ.கா கிளைச் சேவைகளையும் எடுத்துரைத்தார்…
பண்டார் சௌஜானா பகுதி வாழ் மக்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைத் தீர்க்கும் பாலமாக இந்தச் சேவை மையம் விளங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



