
கோலாலம்பூர், ஜூன்-14 – கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இரவு 10.50 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் மேலுமிருவர் காயமடைந்து மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர் ACP கூ மஷாரிமான் கூ மஹ்மூட் அதனை உறுதிப்படுத்தினார்.
உள்ளூரைச் சேர்ந்த 30 முதல் 50 வயதிலான அம்மூவரும், சம்பவத்தின் போது மேலும் சில நண்பர்களோடு அவ்வுணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அவ்விடமே கலவரமானது.
அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, இருவர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களை அடையாளம் காணவும் தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியவும் ஏதுவாக, CCTV கேமரா பதிவை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சில ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாகக் கூறிய ACP கூ மஷாரிமான், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களோ அல்லது தகவல் தெரிந்தவர்களோ விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்