
உலு சிலாங்கூர், மே-26-புக்கிட் சாங்கட் ஆசா மலையில் ஏறும்போது வழிதவறியதாக கருதப்படும் நூர் ஹிசாட்டி ஹுமைரா அஜிசுல்(Nur Izzati umaira Azizul) என்ற 19 வயதுடைய இளம்பெண்ணின் சடலத்தை மீட்புக் குழுவினர் கண்டுப் பிடித்தனர்.
இன்று காலை மணி 11.59 க்கு அந்தப் பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) கூறினார்.
அந்த பெண் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அவரது உடலை ஸ்ட்ரெச்சர் மூலம் மீட்பு நடவடிக்கை மையத்திற்கு கொண்டுவருவதற்கு தேடல் மற்றும் மீட்புக் குழுவுக்கு 20 நிமிடங்கள் பிடித்தது.
நேற்று மாலை மணி 6.30 க்கு ஒத்திவைக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பணி, இன்று காலை 8 மணிக்கு நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சனிக்கிழமை காலை மணி 10.50 க்கு, வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக முன்னதாகவே வந்து சேருவதற்காகத் தனியாக நடந்து செல்ல முடிவு செய்து, தனது குடும்பத்துடன் ஒரு மலையிலிருந்து இறங்கும்போது Nur Izzati umaira Azizul வழிதவறிச் சென்றதாக நம்பப்படுகிறது.



