
பூச்சோங், மே-30-சிலாங்கூர், பூச்சோங் உத்தாமா தொழிற்பேட்டையில் சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ) நடத்திய அதிரடிச் சோதனையில், கடுமையான சுகாதார விதிமீறல்களில் ஈடுபட்ட 5 உணவகங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
ஜாலான் உத்தாமாவில் உள்ள 15 உணவகங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அவற்றில் 5 உணவகங்களில் எலிகளின் எச்சங்கள் கண்டறியப்பட்டதுடன், முறையற்ற உணவு சேமிப்பு, மோசமான உணவு கையாளுதல் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள் இல்லாதது அம்பலமானது.
இதனால் அந்த உணவகங்களுக்கு மிகக் குறைந்த D ‘கிரேட்’ (Grade D) தரம் வழங்கப்பட்டு, 14 நாட்கள் தற்காலிகமாக மூட சீல் வைக்கப்பட்டது.
மேலும், ஊழியர்கள் apron மேலங்கி மற்றும் தலைக்கவசம் அணியாமலிருந்தது, எண்ணெய் வடிகட்டி தளம் அமைக்காதது மற்றும் ஊழியர்கள் டைபாய்டு தடுப்பூசி போடாதது போன்ற குற்றங்களுக்காகவும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
போலீஸ், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு சகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த அதிரடிச் சோதனையில், உரிமமின்றி இயங்கிய கடைகளின் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பொது மக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்ய முடியாது என்றும், வணிகர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் MBSJ எச்சரித்துள்ளது.



