
ஜோகூர் பாரு, ஜனவரி-17,ஜோகூர் பாருவில் போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைதாகியுள்ளார்.
Taman Daya, Jalan Bertam Dua Pertiga எனுமிடத்தில் நேற்று காலை 11.40 மணியளவில் அவ்விபத்து ஏற்பட்டது.
Jalan Austin Perdana Tiga-வில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சிவப்பு நிற Honda Accord காரிலிருந்த 39 வயது அவ்வாடவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டனர்.
சோதனைக்காகக் காரை நிறுத்தச் சொன்ன போது, கேட்காமல் சுமார் 4 கிலோ மீட்டருக்கு அவ்வாடவர் தப்பியோடினார்.
அதுவும் zig zag பாணியில் குறுக்கும் நெடுக்குமாக அவர் காரை ஓட்டியதில், சிங்கப்பூரில் பதிவுப் பெற்ற Mazda 3 கார், Proton Saga, Peugeot 408 ஆகிய 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
அம்மூன்று வாகனங்களிலிருந்தவர்களில் ஒரு காரோட்டி காயமடைந்து கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றார்.
போதை மயக்கத்திலிருந்த ஆடவரும் மற்ற வாகனமோட்டிகளும் காயமின்றி தப்பினர்.
சம்பவ இடத்திலேயே அவரைக் கைதுச் செய்த போலீஸார், 12.99 கிராம் ஷாபு, 13.59 கிராம் ஹெரோயின், 3 யாபா போதை மாத்திரைகள், 2 erimin 5 போதை மாத்திரைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்தின் போது metamfetamina மற்றும் amfetamina போதைப்பொருளை உட்கொண்டிருந்த அந்நபர், 16 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.