
போர்ட் டிக்சன், மே 6 -நேற்று அதிகாலை போர்ட் டிக்சன் கடற்பரப்பில், ஒரு படகோட்டுனர் உட்பட 15 இந்தோனேசிய சட்டவிரோத குடியேறிகள் (PATI) கைது செய்யப்பட்டனர்.
மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் இயக்குநர், கேப்டன் மரிடைம் சலேஹுத்தீன் ஜகாரியா கூறுகையில், சட்டவிரோத கடல் வழிகளை பயன்படுத்தி இதுபோன்ற குடியேற்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
“காலை 3.40 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், வழக்கமான கண்காணிப்பு பணியில் இருந்த கடல் கண்காணிப்பு படகு, பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கிடமான ஒரு படகை, பந்தாய் சஹாயா நெகிரி (Pantai Cahaya Negeri) கடற்கரைக்கு தென்மேற்கில் தடுத்து நிறுத்தியுள்ளது.
அந்த படகில் 20 முதல் 46 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்களும் ஏழு பெண்களும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அவர்களில் யாரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பிரிக்கப்பட்ட நிலையில் இருந்த ‘Colt’ வகை துப்பாக்கி மற்றும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மரிடைம் தலைமையக ஜெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்



