
த்ரோலாக், பேராக், ஜூன் 16 – நேற்று, ‘ஃபெல்டா குனுங் பெசவுட் 2இல் (Felda Gunung Besout 2) உள்ள எண்ணெய் பனை தோட்டமொன்றில், அழுகிய உடல் ஒன்று மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கால்நடைகளைத் தேடிக்கொண்டிருந்த ஒருவர் அந்த அழுகிய உடலை பார்த்தவுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக முஅல்லிம் (Muallim) மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், உடல் ஆடையின்றி, மிகவும் அழுகிய நிலையில் இருப்பதுடன் அருகிலுள்ள வடிகாலில் பெண்ணின் உள்ளாடையும் செருப்பையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் திருமணமான இந்தியப் பெண்கள் பொதுவாக அணியும் நகைப் பொருளான ‘தாலி’ சங்கிலி இறந்தவரின் கழுத்தில் இருந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் அழுகிய உடல் ஈப்போவிலுள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், இவ்வழக்கு தொடர்பான தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறையினரை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.