
மலாக்கா, ஜூன்-19 – மலாக்கா, Jalan Perigi Hang-ங்கில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆடவரின் கைப்பட்டு, அவரின் 3 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று காலை 9.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், 3 பிள்ளைகளில் கடைசியான Muhammad Nud Daniel Nurul Effendy எனும் அந்த ஆண் குழந்தையே மரணமடைந்தது.
வேலையிலிருந்த 40 வயது தாய் Azura Abdul Malik, கிளினிக்கில் ஊசிப் போடுவதற்காக குழந்தையைத் தூக்கிச் செல்ல வீட்டுக்கு வந்த போது, கணவரும் கைக்குழந்தையும் சுயநினைவின்றி கிடப்பதைகண்டு அதிர்ந்துபோனார்.
ஆனால், குழந்தைக்கு இன்னமும் உயிர் இருப்பதை அவர் கண்டார்; உடல் மட்டும் பலவீனமாக இருந்தது.
அருகிலுள்ள உறவினருக்கு தகவல் கொடுத்து, பின்னர் இருவரும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தனர்.
எனினும், சிகிச்சையின் போது குழந்தை உயிரிழந்தது; குழந்தையின் 35 வயது தந்தை Nurul Effendy Ibrahim-மும் மாரடைப்பால மரணமடைந்தது உறுதிச் செய்யப்பட்டது.