
மலாக்கா பொதுக் கழிப்பறையில் பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு
மலாக்கா, பிப்ரவரி 13 –
மலாக்கா தாமான் பண்டாராயா புக்கிட் செரிண்டிட் (Taman Bandaraya Bukit Serindit) பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில், புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
காலை சுமார் ஒன்பது மணியளவில், அந்தக் கழிப்பறையை சுத்தம் செய்த தொழிலாளி ஒருவர் துணியில் சுற்றப்பட்டு பையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டதும் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். குழந்தையின் தொப்புள் கொடி இன்னும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுயோங் (Duyong) பகுதியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நூர் ஹெல்மி (Datuk Mohd Noor Helmy), சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் இந்த சம்பவம் மிகுந்த துயரமும் ஏமாற்றமும் அளிப்பதாக குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. மலாக்கா மாநில போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வு பிரிவின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவின் கீழ் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



