
புது டெல்லி, செப்டம்பர்-12- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து, இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டார்.
இந்த உயர்மட்டச் சந்திப்பில், semiconductor துறையில் இணைந்து செயல்படுவது முக்கியக் கவனத்தைப் பெற்றது.
விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் இருதரப்பு முதலீடுகள் மூலம் தொழில் நுட்பத் துறையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
மலேசிய ஏற்றுமதிப் பொருட்கள் இந்தியாவின் விரிவடையும் சந்தையை விரைவாகச் சென்றடைய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
வரலாற்று ரீதியாகவும் மக்கள் இடையேயான அணுக்கம் மூலமும் இரு நாடுகளின் பொருளாதார உறவு மேலும் உறுதியடையும் எனக் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பயணம் மலேசியா-இந்தியா இடையேயான வியூக மற்றும் பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



