
ஜோர்ஜ்டவுன், மே-12 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு பணிப் படை, புனித சித்திரா பௌர்ணமி நாளில், தனது தெய்வீக கடமையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.
“இது நமது இந்து சமுதாயத்திற்கு ஒரு புதிய ஆன்மீக கட்டமைப்பின் துவக்கமாகும்” என அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் வருணித்தார்.
இந்த சாதனை ஒரு நாளில் உருவானதல்ல, பல மாதங்களாக நடந்த ஆலோசனைகள், திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாகும்.
இது பினாங்கு இந்துக்களின் நீண்ட கால அபிலாஷைகளைப் பிரதிபலிக்கிறது; குறிப்பாக காவடி வழிபாட்டைப் பாதுகாக்க ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறை அவசியம் என்பதைக் காட்டுகிறது.
இந்த பணிப்படையானது, இந்து ஆகமக் கோட்பாடுகளுக்கு ஏற்ப அனைத்து ஆன்மீக செயல்களும் நடைபெறுவதை கல்வி, வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு மூலமாக உறுதிச் செய்யும்.
தவறான நடைமுறைகளைத் தடுக்கும் முயற்சியில் இது, கோவில்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பக்தர்களை பக்தி, ஒழுக்கம் மற்றும் மரியாதை என்ற ஒருங்கிணைந்த கோட்டில் இணைக்கும்.
இது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இன்னொரு பெருமைமிக்க முன்னேற்றமாகும்.
நமது புனித மரபுகளை பாதுகாக்கும் கடப்பாட்டை மீண்டும் உறுதிச் செய்துள்ளோம்.
சித்திரா பௌர்ணமி விழாவன்று, ஒவ்வொரு பக்தி செயலும் மரியாதையுடனும் ஆன்மீகக் கோட்பாடுகளைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்யும் பணி மூலமாக, இப்பயணம் தொடங்குகிறது.
இப்புனித முயற்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிப்போம் என ராயர் கேட்டுக் கொண்டார்.