
புத்ராஜெயா, ஜூன்-7-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா, இவ்வாண்டுக்கான 2 முக்கிய நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதலாவதாக, ‘ஆரோக்கியா மடானி’ (Arogya MADANI) சிறுநீரக சுத்திகரிப்பு மானியத் திட்டம்.
இதன் கீழ், B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த தகுதியுடைய 1,300 இந்திய சிறுநீரக நோயாளிகளுக்கு தலா 5,000 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள், வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்ததாக, மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ‘கல்வி மடானி’ (Kalvi MADANI) இலவசக் டியூஷன் திட்டம்.
இவ்வாண்டு SPM மற்றும் STPM தேர்வுகளை எழுதவிருக்கும் B40 பிரிவைச் சேர்ந்த 5,000 இந்திய மாணவர்களை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்கான கல்விச் சேவை வழங்குநர்கள் (Tuition Centers) மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மித்ரா கேட்டுக் கொண்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மற்றும் கூடுதல் விபரங்களை அறிய விரும்புவோர், திரையில் காணும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம் அல்லது www.mitra.gov.my என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.



