
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பொருளாத அந்தஸ்ந்தையும் உயர்த்தும் ஒற்றுமை அரசாங்கத்தின் கடப்பாட்டை மறு உறுதிச் செய்ய இது அவசியமென, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
2025 வரவு செலவு அறிக்கையின் முதல் கட்டத்திலேயே 40 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு மித்ராவுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது; அது சுமார் 45 சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியாகும். ஆனால், அதன் விநியோகம் தேவையில்லாமல் தாமதமாகியுள்ளது; இவை ஒன்றும் இன்னும் அங்கீகரிக்கப்படாத விண்ணப்பங்கள் அல்ல.
மாறாக, பயிற்சி வழங்குநர்கள், அரசு சாரா அமைப்புகள், சமூக மேம்பாட்டு ஆதரவு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தான – முழு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தங்களாகும்.
அங்கீகாரங்கள் கிடைத்த 4 மாதங்களுக்குப் பிறகும் நிதி விநியோகிக்கப்படாமல் உள்ளது; இதனால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதோடு, பங்குத்தாரர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே இவ்விஷயத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு அந்த 40 மில்லியன் ரிங்கிட் விநியோகத்தை விரைவுப்படுத்த உத்தரவிட வேண்டும்.
2025 பட்ஜெட்டில் மொத்தமாக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதியில் எவ்வளவு அங்கீகரிக்கப்பட்டு விட்டது, எவ்வளவு விநியோகம் செய்யப்பட்டு விட்டது, எத்தனை விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பனவற்றுக்கு மித்ரா முழு கணக்குக் காட வேண்டும்;
அதே சமயம், அங்கீகரிக்கப்பட்ட நிதிகள் அட்டவணைப்படி விநியோகிக்கப்பட்டு, அவை எப்படி செலவிடப்படுகின்றன என்பதை கண்காணித்து மாத அடிப்படையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என லிங்கேஷ் கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கம் மீது இந்தியச் சமூகம் வைத்துள்ள நம்பிக்கையில் கீறல் விழக் கூடாது; எனவே இவ்விஷயம் விரைந்து தீர்க்கப்பட வேண்டியது அவசியமென அவர் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.