
பத்து பஹாட், ஜூலை 31 – பத்து பஹாட்டில் நேற்றிரவு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதைத் தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததில், ஐந்து பேர் தீக்காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர், வேன் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்திருப்பதைக் கண்டனர்.
வேனில் இருந்த ஐந்து பேரும் தப்பிக்க முயன்றபோது தீக்காயமடைந்துள்ளனர். இருப்பினும், தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே அவர்கள் அனைவரும் வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் மேற்கொண்ட சோதனையில், அந்த வேனில் வாயு சிலிண்டர் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



