
கோலாலம்பூர், ஜூன்-28 – SPM தேர்வில் A- உட்பட 10 பாடங்களிலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற அனைத்து மாணவர்களும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளுக்கு நேரடியாகத் தகுதிப் பெறுவர் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், அரசாங்கம் மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் பரிவையும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கையும் இது புலப்படுத்துதாக, பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கூறினார்.
SPM முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பில் இணையம் வாயிலாக வழிகாட்டுவதில் முன்னணி வகிக்கும் முன்னணி கல்வியாளர்களான Dr புனிதன், Dr. சஞ்சய் இருவரும், இவ்விவகாரத்தை என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
கல்வி அமைச்சின் புதிய விதிமுறையால், A- தேர்ச்சியைப் பெற்றவர்கள் குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வாய்ப்பைப் பெறுவதிலிருந்து விடுபடும் அபாயத்தை, அவர்கள் சுட்டிக் காட்டினர்.
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வாரும் இவ்விவகாரத்தில் அக்கறையோடு கவலை எழுப்பினார்.
நாங்கள் கூட்டாக அமைச்சின் கவனத்துக்கு இதனைக் கொண்டுச் சென்றோம்.
அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பால் இவ்விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, சுமூகமானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், 10 பாடங்களில் ஒன்றிலோ அல்லது அதற்கும் மேற்பட்டோ A- தேர்ச்சிப் பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
பல்முனை அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களின் கருத்துகளைக் கேட்டு அமைச்சரவையின் அறிவுரையை ஏற்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் திறந்த மனதுடன் செயலாற்றியுள்ளார்.
அவரையும் பாராட்டவே வேண்டும்.
SPM மாணவர்களின் நலனில் நூருல் இசாவின் அக்கறையும் பங்களிப்பும் போற்றத்தக்கது.
அதே போல் சமூக நலனை முன்னிறுத்தி கடமையாற்றிய Dr புனிதன், Dr சஞ்சய் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளதாக சண்முகம் தெரிவித்தார்.
இது, மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து மக்கள் பணியாற்றும் மடானி அரசு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருப்பதாக, சண்முகம் புகழாரம் சூட்டினார்