
புத்ராஜெயா, மே-8 – 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளதால், அவ்விரு அணுவாயுத நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் இந்தியா – பாகிஸ்தானுக்கு சுற்றுலா உட்பட அவசரமற்ற – அவசியமற்ற பயணங்களை ஒத்தி வைக்குமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக பாகிஸ்தானை எல்லையாகக் கொண்ட மாநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு, புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசிய உயர் ஆணையமோ, பாகிஸ்தானில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
நிச்சயமற்ற இச்சூழ்நிலையில் பாகிஸ்தானனுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென, உயர் ஆணையம் அறிவுறுத்தியது.
இரு நாடுகளிலும் வசிக்கும் மலேசியர்கள் அங்குள்ள மலேசிய உயர் ஆணையங்களில் பதிந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஏப்ரல் கடைசியில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஜம்மு – காஷ்மீரில் சுற்றுப் பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவுப் பெற்ற பயங்கரவாதிகளே காரணம் எனக் குற்றம் சாட்டிய இந்தியா, புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 இடங்களைக் குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் பொது மக்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை உறுதிச் செய்த பாகிஸ்தான், தெற்காசியாவில் இந்தியா ‘தீ மூட்டி விளையாடுகிறது’ என கடுமையாகச் சாடியது.
அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானியப் பிரதமரும் சூளுரைத்துள்ளார்.
தெற்காசியாவை போர் மேகம் சூழ்ந்துள்ளது அவ்ட்டாரத்தை மட்டுமின்றி உலக நாடுகளையும் கவலையடைச் செய்துள்ளது