
புத்ராஜெயா, ஜூன்-16 – முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை வைத்திருந்த வழக்கிலிருந்து விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, AGC எனப்படும் தேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது.
நீதிபதியின் முடிவை கவனமாக பரிசீலித்த பிறகு, மேல்முறையீடு செய்ய முடிவெடுத்ததாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் AGC கூறியது.
2 குற்றச்சாட்டுகளையும் நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறியதாக, உயர் நீதிமன்ற நீதிபதி ஜாமில் ஹுசின் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
குறிப்பாக, போதைப்பொருள் மற்றும் போலி கைத்துப்பாக்கிகள் பற்றி ராவுத்தர் அறிந்திருந்தார், அவை அவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை .
எனவே, ராவுத்தரை தற்காப்பு வாதத்திற்கு அழைக்காமலேயே விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
2024 செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு கோலாலம்பூர் போலீஸ் நிலைய பள்ளிவாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் 305 கிராம் கஞ்சாவை கடத்தியதாக ராவுத்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
போதைப்பொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதே நாள் காலை 9.25 மணிக்கு ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள செனாடா அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே போலி கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.