
பெர்மாத்தாங் பாவ், ஜூலை-5, – மாநிலங்களில் உள்ள வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்குமாறு சமய விவகார அமைச்சர் சுல்கிஃப்லி ஹசான் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள சில முக்கிய வணிக வளாகங்களில் இந்த முன்னோடித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இதனை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது புத்ராஜெயாவின் IOI City Mall, Alamanda மற்றும் கோலாலம்பூரின் Suria KLCC ஆகிய வணிக வளாகங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தால் வணிக வளாகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்தக் கட்டமாக இத்திட்டத்தை விமான நிலையங்கள், போக்குவரத்து முனையங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் இடங்கள் (R&R) போன்ற பொது இடங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.



