ஜோகூர் தேர்தல் களம்: நஜீப் விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்வதாக அன்வார் சாடல்

லேடாங், ஜூலை-6 – ஜோகூர் மாநிலத் தேர்தலை மையப்படுத்தி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை விடுதலை செய்யக் கோரும் குழுவினர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேவையின்றி இழுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
வலுவான பெரும்பான்மை இருந்தும் மாநில அரசை முன்கூட்டியே கலைத்து தேர்தலை மக்களிடம் திணித்துள்ளனர்.
நஜீப்பை விடுதலை செய்வதற்கான ஆரம்ப முயற்சியே இதுவென அவல் சாடினார்.
ஆனால், _“சட்டத்தின் ஆட்சியில் எந்தவொரு சமரசமும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய விவகாரங்களைத் தேர்தல் களத்திற்குக் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்துவது தேவையற்றது”_ என லேடாங்கில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள நஜீப் விவகாரத்தைப் பயன்படுத்துவது, ஜனநாயக நடைமுறையைச் சிதைக்கும் செயல் என அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்குக் கிடைக்கும் அமோக வெற்றியானது, நஜீப்பின் விடுதலைக்கு வழிகோலும் என அவரின் மகன் அண்மையில் பேசியதாக பரபரப்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நஜீப் விவகாரத்தை மையப்படுத்தி எதிர் கட்சிகளும், ஆதரவு குழுக்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த விமர்சனம் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.



