
கோலாலம்பூர், ஜூலை-5-மலேசியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தேசிய புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இதில் 11 விழுக்காட்டு பாதிப்பு 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடமே காணப்படுவதாக, அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் Dr M.முரளிதரன் கூறினார்.
இவர்கள் பெரும்பாலும் நோய் முற்றிய நிலையில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் கட்டத்தில்தான் கண்டறியப்படுகிறார்கள்.
மலேசியர்களைத் தாக்கும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலக் கட்டத்தில் மட்டுமே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 24 ஆயிரமாக உயர்ந்துள்ளது என முரளிதரன் சொன்னார்.
மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை இதன் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் ஆண்டுதோறும் சுகாதார பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அறிகுறிகள் இல்லை என்றாலும், முன்கூட்டியே கண்டறிவதே உயிரைக் காக்கும் சிறந்த வழி.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை அனைவரும் உறுதிச் செய்வோம் என்றார் அவர்.



