
கங்கார், ஆகஸ்ட்-25- பெர்லிஸ், கங்காரில் வாடிக்கையாளர் போல் நடித்து மீன்பிடி கருவியைத் திருடிய தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல், விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் அலோர் ஸ்டாரைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடைய தம்பதியினர் நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கங்கார் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.
கட்டிடத்திற்குள் திருடிய குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380-ன் கீழ் விசாரிப்பதற்காக அவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடைக்குள் நுழைந்து பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, கைதானவர்களில் ஒருவரான கணவர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து சிவப்பு நிற மீன்பிடி கருவி ஒன்றை எடுத்து தனது மனைவி வைத்திருந்த பைக்குள் அதனை மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அத்தம்பதியினர் வழக்கம் போல் மற்ற பொருட்களுக்கான பணத்தைச் செலுத்தக் கவுண்டருக்குச் சென்றுள்ளனர். CCTV காட்சிகளைப் பார்த்த பின்னரே, 169 ரிங்கிட் மதிப்புள்ள மீன்பிடிக் கருவி காணாமல் போனது கடை உரிமையாளருக்குத் தெரிய வந்ததாக Yusharifuddin விளக்கினார்.



