
கோலாலம்பூர், மே 8 – மார்ச் 29 ஆம்தேதி முதல் ஏப்ரல் 30 ஆம்தேதிவரை உலகளாவிய விநியோக நெருக்கடி தொடர்பான மொத்தம் 464 தவறான உள்ளடக்கங்கள் அடையாளம் காணப்பட்டதாக தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அவற்றில் 312 உள்ளடக்கங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 65 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பபட்டு அவற்றில் 15 விவகாரங்கள் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மற்றவை விசாரணையில் உள்ளன என்று இன்று நடைபெற்ற ஹவானா 2026 ஊடக மன்ற ஆய்வரங்கை தொடங்கி வைத்து உரையாற்றியபோது தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
தொடர்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் நிக் கமருசமான் நிக் ஹுசின்,
(Nik Kamaruzaman Nik Husin) ,மலேசிய தேசிய செய்தி நிறுவனமான (பெர்னாமா) தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் (Wong Chun Wai), பெர்னாமாவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூர்-உல் அபிடா கமலுடின் (Nur-ul Afida Kamaludin ) மற்றும் பெர்னாமா தலைமை ஆசிரியர் அருல் ராஜூ துரைராஜ் (Arul Rajoo Durar Raj) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் பெருக்கப்பட்ட தவறான தகவல்களின் விரைவான பரவல், பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.
போலி கணக்குகள் மற்றும் பொதுப் பிரமுகர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட மோசடியான உள்ளடக்க வழக்குகள் அண்மைய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து கடந்த ஆண்டில் 98,503 ஆக உயர்ந்துள்ள தகவலையும் தியோ நீ சின் வெளியிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம்தேதிவரை இதுபோன்ற 60,829 உள்ளடக்கங்கள் தளங்களால் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன.



