
கோலாலம்பூர், மார்ச்-1 – வேர்ச்சொல் ஆய்வாளரும் சொல்லாக்க வல்லுநருமான இரா. திருமாவளவன் கைவண்ணத்தில் கலைச்சொல் அகரமுதலி வெளியீடு கண்டுள்ளது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தலைமைத் தாங்கி நூலை வெளியிட்டார்.
அறிவியல், நுட்பவியல், பொதுவியல் அம்சங்களை உள்ளடக்கி, 650 பக்கங்களுடன், 2 மொழிகளில் பத்தாயிரம் கலைச் சொற்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்நூல், மலேசியத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழ் சமுதாயத்திற்கே மிகவும் அவசியமான அரும்படைப்பு என சரவணன் புகழாரம் சூட்டினார்.
மற்ற மொழிகள் குறிப்பாக ஆங்கிலத்தில் புது புது சொற்கள் உருவாகும் போது அவற்றுக்கு சரியான தமிழாக்கத்தைத் தேடுவதற்கு இனியும் சிரமம் இருக்காது.
எனவே திருமாவளவனின் இப்படைப்பு தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டுமென்றார் அவர்.
கோலாலம்பூர் தான் ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற அந்நூல் வெளியீட்டு விழாவில், தான் ஸ்ரீ க.குமரன், டத்தோ சகாதேவன், டத்தோ ஸ்ரீ ஆனந்தன், ஹோங் கோங் தமிழ் தொல்மரபு இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் மெய்.சித்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
வண்ணப் படங்களுடன் கூடிய இந்த கலைச்சொல் அகரமுதலி நூலின் அடக்கவிலை 150 ரிங்கிட்டாகும்.