
ஜோகூர் பாரு, மே-19-ஜோகூர், ஸ்கூடாயில் ஒரு பிரபல பேரங்காடி ஒன்றின் முன், பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வைரல் காரசார விவாதம் ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில், பேரங்காடிக்குள் நுழையும் பாதை தொடர்பாக U வளைவில் இரு ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது ‘புரோட்டான் சாகா’ கார்களை நடுவழியிலேயே நிறுத்தி பாதையை முற்றிலுமாக மறித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் 6 மணிக்கெல்லாம் இருவருமே தனித்தனியாக போலீஸில் புகார் செய்தனர்.
இருப்பினும், இந்த பதற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
பிறகு இரு ஓட்டுநர்களும் நேரில் சந்தித்து, தங்களுக்குள் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையை சுமுகமாக பேசித் தீர்த்துக்கொள்ள சம்மதித்ததாக, வட ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.



