
கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியச் சிறைச்சாலைத் துறையின் வாகன அணிவகுப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளிக்கு, அத்துறை தற்போது விளக்கமளித்துள்ளது.
இதில் எவ்வித SOP பாதுகாப்பு நடைமுறை விதிமீறல்களும் இல்லையென அது விளக்கியது.
சமூக ஊடகங்களில் வைரலான அந்தக் காணொளியில், சிறைச்சாலை பேருந்துகள், பாதுகாப்பு வாகனங்கள் இன்றி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
காஜாங் சிறையிலிருந்து நீதிமன்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கைதிகளை அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பயணத்தின்போது ஒரு பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, மற்ற வாகனங்கள் திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர்ந்தன.
உண்மையில், பாதுகாப்பு விதிமுறைகளின்படியே சைரன் ஒலி மற்றும் சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளின் முடிவு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குறித்து விரிவான உள் விசாரணை நடத்தப்படும் என்றும், பொது மக்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் சிறைச்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.



