
10 ஆண்டுகளில் தினமும் 5 பாலியல் வன்முறை சம்பவங்கள்; சிலாங்கூரே முதலிடம்
கோலாலம்பூர், பிப்ரவரி-24,
கடந்த 2015 முதல் 2025 வரை நாட்டில் தினமும் சராசரியாக 5 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 17,609 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக, உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஆனால், அவற்றில் 7,090 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டன.
இது, அளிக்கப்பட்ட புகார்களுக்கும் சட்ட நடவடிக்கைக்கு சென்ற வழக்குகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை காட்டுகிறது.
மாநில வாரியாக பார்க்கும்போது, சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக 3,392 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்து ஜோகூரில் 2,006, சபாவில் 1,817, கெடாவில் 1,465 சம்பவங்கள் பதிவாகின.
ஆகக் குறைவாக பெர்லிஸில் 275 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டன.
நாட்டில் பாலியல் வன்முறை இன்னும் தீவிரமாக இருப்பதையும், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதையும் இந்த புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன.



