
கோலாலும்பூர், ஜூன் 4 – அண்மையில் நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களை பதிந்து கொண்டுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உதவி நிதி நிறுத்தப்படும் என, பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவனேசன் வெளியிட்ட கருத்திற்கு, ம.இ.கா. தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல் சிவசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சிவநேசன் தனது கருத்தில் மிக உறுதியாக இருப்பதாக வணக்கம் மலேசியாவிடம் கூறியுள்ளார்.
இன்னும் ஒரு சில ஆலயங்கள், இன்றும் 10க்கும் குறைந்த உறுப்பினர்களைக் கொண்டு இயங்கிவரும் நிலையில், அரசாங்க மானியங்கள் வழங்கப்பட்டால், அந்த நிதி ஆலயங்களுக்கும் சமூக நலனுக்கும் எவ்வாறு பயன்படும் என்பது மிக பெரிய கேள்விக்குறி என்றார் சிவநேசன்.
அதுவும் அந்த 10 உறுப்பினர்களும் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் நிலையும் இருக்கிறது. இப்படி நிர்வகிக்கப்படுகின்ற ஆலயங்களுக்கு மானியம் சென்று சேர்ந்தால், அந்நிதி குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அச்சமும் உள்ளதென்று அவர் விளக்கினார்.
தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தலைவர்கள், ஒரே நிர்வாகம் என்றிருக்கும் ஆலயங்களில், இளைஞர்களுக்கோ புதிய நபர்களுக்கோ வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில், புத்தாக்க நடவடிக்கைகளும் சமுதாயத்திற்குப் பயனளிக்க கூடிய முயற்சிகளும் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
இத்தைகைய பிரச்சனைகளைக் களைவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஆலயங்களில், இளைஞர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஆலயங்கள் கொண்டிருக்க வேண்டுமென்று தான் எடுத்துரைத்த கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இத்தகைய ஆலயங்கள் அரசாங்க மாநியங்களைப் பெறுவதற்கு
உறுப்பினர்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளக் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.