
கோலாலம்பூர், ஜூன்-11 – 16-ஆவது பொதுத்தேர்தல் வரை தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என அம்னோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ Dr அஷ்ரஃப் வாஜ்டி டசுக்கி இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டார்.
என்றாலும், மத்திய அரசாங்க அளவில் ஒற்றுமை அரசாங்க உடன்படிக்கை தொடர்ந்தாலும், அது மாநில அளவிலான முடிவுகளைக் கட்டுப்படுத்தாது என்றார் அவர்.
குறிப்பாக, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில், தொகுதிப் பங்கீடு மற்றும் தன்னாட்சியைத் தற்காத்துக் கொள்ள கட்சி எடுக்கும் முடிவுகள், மத்திய அரசுக்குச் செய்யும் துரோகமாக கருதப்படக் கூடாது என்றும் அஷ்ரப் வாஜ்டி வலியுறுத்தினார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடிப்படையில் எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்புக்கு அம்னோ தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மைய வாரங்களாக பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிகளுக்கு இடையில் வெளிப்படையான மோதல் வெடித்து வரும் நிலையில், அம்னோவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



