
புத்ராஜெயா, ஆகஸ்ட்-25-இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 21 மில்லியனுக்கும் அதிகமான அனைத்துலக சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கு வருகைத் தந்துள்ளனர்.
இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.5 விழுக்காட்டு வளர்ச்சியாகும்.
இருப்பினும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சிக் காலத்தில் இதுவே மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் என சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியக் கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக மலேசியாவுக்கான 4,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
மேலும், இது உலகளாவிய விமானக் கட்டணங்களையும் எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.
இதனால், மலேசியாவின் 50 முக்கிய சுற்றுலா சந்தைகளில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் உட்பட 26 நாடுகளில் இருந்து சுற்றுப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக, புத்ராஜெயாவில் அரையாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்கையில் கிங் சிங் கூறினார்.
இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், சிங்கப்பூர், சீனா மற்றும் வட அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளில் இருந்து வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை மலேசியாவின் சுற்றுலாத் துறை தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியைக் காண உதவியுள்ளது என்றார் அவர்.



