Latestமலேசியா

2030-க்குள் TVET மூலம் 33 லட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு – ரமணன்

கோலாலம்பூர், ஜூலை 2 – புதிய தொழில் துறை முதன்மைத் திட்டத்தின் (NIMP 2030) கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.3 மில்லியன் தொழிலாளர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான வேலைவாய்ப்புச் சந்தையை உருவாக்கும் முயற்சியில் மலேசியா களமிறங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (திவெட்) ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் சுமார் 700,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய திவெட் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மைய மேலாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இந்த இலக்குகளை முன்வைத்தார்.

திறன் மேம்பாட்டுத் துறை (JPK) மற்றும் பயிற்றுவிப்பாளர் பயிற்சி மற்றும் மேம்பட்ட திறன் மையம் (CIAST) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, நாட்டின் திவெட் சுற்றுச்சூழல் அமைப்பின் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய தளமாக விளங்குகிறது.

13-வது மலேசியத் திட்டத்தின் (RMK-13) தொடக்கத்துடன், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 77,200 ரிங்கிட் என்ற இலக்கை எட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.

பிரதமரின் ‘திவெட் 2.0 உயர் திறன்கள்’ எனும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இனிவரும் காலங்களில் உயர்வளர்ச்சி மற்றும் உயர் மதிப்புள்ள (HGHV) துறைகளில் மட்டுமே கல்வி மற்றும் பயிற்சி முறைகள் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் உறுதிபடக் கூறினார். இதற்காக, அரசு மற்றும் தொழில்துறையின் கூட்டு முதலீட்டுடன், முதுகலை அளவிலான தொழிற்கல்விப் பயிற்சிகள் விரிவுபடுத்தப்பட உள்ளன.

இந்த மாநாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக, 2026-2030 ஆண்டுகளுக்கான ஜே.பி.கே. சர்வதேசமயமாக்கல் செயல் திட்டத்தை டத்தோ ஸ்ரீ ரமணன் அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம், மலேசிய திறன் சான்றிதழ்கள் (SKM) மற்றும் தேசிய தொழில்முறை திறன் தரநிலைகள் (NOSS) உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று, சர்வதேச சந்தையில் நம் நாட்டுத் தொழிலாளர்களின் மதிப்பினை உயர்த்தும். டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்திற்கு ஏற்ப, திறன் மேம்பாட்டுத் துறையில் ‘வார் ரூம்’ (War Room) அமைக்கப்பட்டு, 150 ஏஐ திறன் கொண்ட அதிகாரிகள் உருவாக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அறிவித்தார்.

அதேசமயம், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் பயனடையும் வகையில் ‘முந்தைய சாதனைகளுக்கான அங்கீகாரம்’ (PPT 2.0) திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தொழில்துறை சார்ந்த சூழலியல் முறைமையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், 2025-ஆம் ஆண்டில் திவெட் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைக் கடந்து சாதனை படைத்திருப்பதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, மலேசிய ஏவியேஷன் குழுமம் (MAG) மற்றும் பெலியா மாஹிர் இன்டர்நேஷனல் திவெட் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!