
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-24-நாட்டின் மூத்த குடிமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதிச் செய்யும் வகையில், மலேசியாவின் கட்டடக் கட்டமைப்புகள் முதியவர்களுக்கு உகந்த வசதிகளுடன் மேம்படுத்தப்பட வேண்டும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.
2040-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 14 விழுக்காட்டைத் தாண்டி மலேசியா முதியோர் நாடாக மாறும் என்பதால், இம்மாற்றம் காலத்தின் கட்டாயம் என்றார் அவர்.
The Hubexo Asia Awards Malaysia 2026 நிகழ்வில் உரையாற்றிய அவர், முதியோருக்கான பிரத்யேகக் குடியிருப்புகள் மட்டுமின்றி, வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களிலும் முதியோர் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இடம்பெற வேண்டும் என்றார்.
அத்துடன், சுற்றுச்சூழல் தோழமைக் கட்டுமான முறைகளைக் கடைப்பிடிப்பதோடு, விற்கப்படாத வீடுகளின் பிரச்னைக்குத் தீர்வுகாண அடுத்தாண்டு முதல் வீடமைப்புத் துறையில் பெருந்தரவு பகுப்பாய்வு முறை (Big Data Analytics) அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



