
ஜோகூர் பாரு, ஏப்ரல்-19 – 219-ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு, ஜோகூர் மாநில இந்து போலீஸ்காரர்கள் இணைந்து சிறப்பு பிரார்த்தனை மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்வை ஜோகூர் பாருவில் மிகச்சிறப்பாக நடத்தினர்.
அருள்மிகு ராஜமாரியம்மான் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ எம். குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறப்புப் பூஜை, பக்திப் பாடல்களுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், சமூகக் கடப்பாட்டின் ஒரு அங்கமாக மாற்றுத்திறனாளிகளுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் நிதியுதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் போலீஸ் துணைத் தலைவர் DCP Hoo Chuan Huat, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ACP எம். குமராசன் மற்றும் இதர உயரதிகாரிகள் பலரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பித்தனர்.

பல்வேறு கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்கும் இந்நிகழ்வு, அரச மலேசிசப் போலீஸ் படையின் ஒற்றுமையையும், நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.



