
அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), ஜூன்-3 – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக தானமாக வழங்குகிறார்.
சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் மனித ஆற்றலை வெளிக்கொணர்ந்து, ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்படைய வேண்டுமென, உலகின் ஐந்தாவது மிகப் பெரும் கோடீஸ்வரரான பில் கேட்ஸ் கூறினார்.
“தாய் கர்ப்பமாக இருக்கும்போதும், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் ஆரோக்கியமாகவும், நல்ல ஊட்டச்சத்து பெறவும் உதவுவது மிகவும் வலுவான பலன்களைத் தருகிறது”
“ஆப்ரிக்கக் குழந்தைகளுக்கு முதல் நான்கு ஆண்டுகளில் நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிச் செய்வதன் மூலம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என்றார் அவர்.
இந்நிலையில் ஆப்பிரிக்க இளம் கண்டுபிடிப்பாளர்கள், அக்கண்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த AI அதிநவீன தொழில்நுட்பத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2045-ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் டாலர்களை எட்டுமென எதிர்பார்க்கப்படும் தனது செல்வத்தில் 99 விழுக்காட்டை நன்கொடையாக வழங்கவிருப்பதாக, கேட்ஸ் கடந்த மாதமே அறிவித்திருந்தார்.
அவ்வாண்டோடு அவரது அறக்கட்டளை அதன் செயல்பாடுகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” கொள்கையால், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான திட்டங்கள் உட்பட ஆப்பிரிக்காவுக்கான உதவிகளை அமெரிக்க அரசாங்கம் குறைத்துள்ளது.
இது அக்கண்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.