
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 — நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,912 மரம் விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட், இந்த எண்ணிக்கை நாடு முழுவதும் பதிவான மரம் விழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மழைக்காலம் மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுமக்கள் உயரமான மரங்களுக்கு அருகில் தேவையின்றி நிற்பதையோ, வாகனங்களை நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி அமைப்புகள் ஆபத்தான மற்றும் முதிர்ந்த மரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை பராமரிக்கவும் அல்லது அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மரங்களின் நிலைத்தன்மையை அவ்வப்போது பரிசோதிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



