
கோலாலம்பூர், ஜூலை-3-மலேசியாவின் 70-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தேசிய நினைவுச் சின்னமான ‘துகு நெகாரா’வை (Tugu Negara) புனரமைக்க அமெரிக்க அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில், மலேசியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் தற்காலிக தூதர் டேவிட் ஹெச். கேம்பிள் ஜூனியர் (David H. Gamble Jr.) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ‘இவோ ஜிமா’ (Iwo Jima) நினைவுச் சின்னமும், மலேசியாவின் துகு நெகாராவும் பெலிக்ஸ் டி வெல்டன் (Felix de Weldon) என்ற ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க மக்களின் சார்பில் வழங்கப்படும் இந்த நிதியுதவி, கலாச்சார பாதுகாப்புக்கான தூதர்களின் நிதியத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
மலேசிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இந்த புனரமைப்புப் பணிகளின் மூலம், அடுத்தாண்டு நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 70-ஆவது சுதந்திர தினத்திற்குள் நினைவுச் சின்னம் முழுமையாகப் பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



