
பேங்காக், மே-13 – குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் கூறினார்.
ஆனால், புதிய நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்பது மட்டும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
2024 ஜூலை முதல், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகால விசா சலுகைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் குறித்து எழுந்த கவலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், நாட்டிற்குள் வரும் வெளிநாட்டவர்கள் தங்களது விசா நோக்கத்திற்கேற்ப செயல்படுகிறார்களா என்பதையும் தாய்லாந்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 10 வரை, தாய்லாந்துக்கு 12.4 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 3.43 விழுக்காடு குறைவாகும்.



