
கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசியா முழுவதும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் தேவையில் 99.8 விழுக்காடு, பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (KPM) தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி நிலவரத்தின்படி, 10,478 பாலர் பள்ளி ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருவதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh ) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2023 முதல் 2025 வரை 1,202 புதிய பாலர் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் சேர்க்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்கள் கட்டம் கட்டமாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த முன்பணியும் பணிக்காலப் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே 31ஆம் தேதி நிலவரத்தின்படி, நாடு முழுவதும் 10,491 பாலர் பள்ளி வகுப்புகள் செயல்பட்டு, 217,026 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதிய வகுப்புகள் குழந்தைகளின் எண்ணிக்கை, உள்ளூர் தேவை, தற்போதைய வசதிகள் மற்றும் பகுதியின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு தொடங்கப்படுகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,040 புதிய முன்பள்ளி வகுப்புகளை தொடங்க கல்வி அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2026ஆம் ஆண்டில் 325 புதிய வகுப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் மேலும் 300 வகுப்புகள் தொடங்கி, அதிகமான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



