புத்ராஜெயா, மே-17, புகைப்பிடிக்கும் மலேசியர்களில் கிட்டத்தட்ட 41 விழுக்காட்டினருக்கு, அப்பழக்கத்தை நிறுத்தும் எண்ணம் அறவே இல்லை என்பது ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரியவர்களில் 9 விழுக்காட்டினர் மட்டுமே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை வரும் மாதங்களில் கைவிட முடிவுச் செய்திருப்பதாக, 2023-ஆம் ஆண்டு உலகப் புகையிலை ஆய்வின் மலேசிய அறிக்கைக் கூறியுள்ளது.
மேலும் 13 சதவிகிதத்தினர் அடுத்த 12 மாதங்களுக்கு அவ்விலக்கை வைத்திருக்கும் வேளை, 37% இப்போதில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் சிகரெட் பிடிப்பதை நிச்சயம் நிறுத்துவோம் என தெரிவித்திருக்கின்றனர்.
வயதுக்கு வந்த மலேசியர்கள் சிகரெட்டுக்காக மாதமொன்றுக்கு சராசரியாக 178 ரிங்கிட்டைச் செலவிடுவதும் தெரிய வந்துள்ளதாக, நேற்று அவ்வாய்வு முடிவுகளை வெளியிட்ட போது
சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார்.
மலேசியாவில் உள்ள பெரியவர்களில் 48 லட்சம் பேர் அல்லது 19 விழுக்காட்டினர் சிகரெட் பிடிக்கின்றனர்.
அவர்களில் 37 லட்சம் பேர் தினமும் சிகரெட் பிடிக்கின்றனர்.
அனைத்து மாநிலங்களிலும் 5,780 குடும்பங்களை உட்படுத்தி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 2 மாதங்களுக்கு அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.