
சிங்கப்பூர், மார்ச்-12 – மலேசியத் தயாரிப்பான Kopi Penumbuk காப்பியில், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மைப் பிரச்னைக்கு கொடுக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மாத்திரையான Tadalafil கலக்கப்பட்டிருப்பதை, சிங்கப்பூர் உணவு நிறுவனமான SFA கண்டுபிடித்துள்ளது.
மருத்துவக் கண்காணிப்பின் மூலம் மட்டுமே அம்மாத்திரை உட்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், ஆண்களின் பாலியல் பிரச்னைக்கு அருமருந்து எனக் கூறி காப்பி வடிவில் அது விற்கப்படுகிறது.
எனவே உள்ளூர் மின் வர்த்தகத் தளங்களில் விற்கப்படும் அக்காப்பியை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாமென அது சிங்கப்பூரியர்களை அறிவுறுத்தியது.
விற்பனைப் பட்டியலில் இருந்து அதனை உடனடியாக நீக்குமாறு மின் வர்த்தகத் தளங்களை உத்தரவிட்டுள்ளோம்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் SFA எச்சரித்தது.
மருத்துவ அறிவுரையில்லாமல் Tadalafial-லை உட்கொள்வது, ஆபத்தான பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மாரடைப்பு, பக்கவாதம், தலைவலி, ஒற்றைத் தலைவலி, சீரறற்ற நெஞ்சுத் துடிப்பு போன்றவையும் அவற்றிலடங்கும்.
ஏற்கனவே இருதயக் கோளாறு உள்ளவர்களுக்கு, குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாய் முடியலாமென்றும் SFA நினைவுறுத்தியது.
சிங்கப்பூர் விற்பனைச் சட்டத்தின் படி, பாதுகாப்பற்ற உணவுகளை விற்க அக்குடியரசில் அனுமதியில்லை.
தடை மீறினால் அதிகபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் 3 மாத சிறையும் விதிக்கப்படலாம்.