
புத்ரா ஜெயா, மே 7 – இம்மாதம் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு மனுச்செய்யும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளனர்.
நடப்பு விதிமுறைக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் கொள்கை பொருத்தமான சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ந்து அமல்படுத்தப்படும் என பொதுச்சேவைத்துறை தெரிவித்துள்ளது.
தகுதியுள்ள அரசு ஊழியர்கள் தகுந்த பரிசீலனைக்காக அந்தந்த துறைத் தலைவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறப்படுவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் பொதுச் சேவைத்துறை வலியுறுத்தியது.
இந்த மாதம் முழுவதும் நடைபெறும் ஆசியான் உச்சநிலை கூட்டம் அது தொடர்பான நிகழ்ச்சிகளின்போது போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவோர் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும்படி அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்கறையுள்ள நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று பொதுச் சேவைத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆசியான் உச்ச நிலை மாநாடு மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்.
பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் அதிகாரிகள், சீனா மற்றும் வளைகுடா நாடுகள் போன்ற கலந்துரையாடல் பங்காளிகள் உட்பட சுமார் 20,000 பங்கேற்பாளர்களை இது ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது