
கூச்சிங், மே-16 – நாட்டிலுள்ள ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து ஈராண்டுகளைப் பூர்த்திச் செய்த கையோடு, இனி எந்த நிபந்தனையும் இல்லாமல் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை ஒட்டி கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் அறிவித்துள்ள 6 நற்செய்திகளில் இதுவும் ஒன்றாகும்.
சரவாக் கூச்சிங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான 54-ஆவது ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் போது அவர் அவற்றை அறிவித்தார்.
பணியிட மாற்றம் தவிர, இவ்வாண்டு MyPg எனப்படும் 1,470 உதவி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்.
மூன்றாவது நற்செய்தியானது, ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் சிறந்த புத்தாக்க ஆசிரியர், சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகளை வென்ற 32 ஆசிரியர்கள், GIFT திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் உள்ள அனைத்துலகப் பள்ளிகளில் பணியாற்றும் அனுபவத்தை இலவசமாகப் பெறுவர்.
இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள், பல்வேறு துறைகளில் புதியவற்றைக் கற்கவும் அனுபவங்களையும் பெறவும் ஏதுவாக, வெளிநாடுகளுக்கு குறுகிய கால பயிற்சிகளுக்கு அனுப்பப்படுவர்.
MH GoM இணையத் தளம் வாயிலாக, ஆசிரியர்களின் விமானப் பயணங்களுக்கு 20 விழுக்காடு கழிவுச் சலுகை வழங்குவது ஐந்தாவது நற்செய்தியாகும்.
DELIMa KPM ID-யைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக நூல்களை வாங்குவதற்கு, 20 முதல் 30 விழுக்காடு கழிவு வழங்குவது ஆறாவது நற்செய்தியாகுமென ஃபாட்லீனா அறிவித்தார்.
‘கல்வி சீர்திருத்தத்தின் உந்துச் சக்தியே ஆசிரியர்கள்’ எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.