
ஜோர்ஜ்டவுன், மே-27- ஜோர்ஜ்டவுன் பாராட் டாயாவில் செயல்படும் உணவங்காடி நிலையத்தை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சமையல் கட்டு மற்றும் உணவுத் தயாரிக்கும் இடங்களில் கரப்பான்பூச்சிகள் மேய்ந்துக் கொண்டிருந்ததை அடுத்து, பினாங்கு மாநகர மன்றமான MBPP அவ்வுத்தரவை வெளியிட்டது.
அங்கு மேற்கொண்ட சோதனையில், அவ்விடம் மிகவும் அசுத்தமாக இருந்ததோடு, நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டையும் பூர்த்திச் செய்யவில்லை.
இதையடுத்து முழு துப்புரவுப் பணிகளுக்கு வழி விட ஏதுவாக 2 வாரங்களுக்கு அவ்விடம் மூடப்படுகிறது.
அடுத்த பரிசோதனை முடிவைப் பொருத்து அவ்வுணவங்காடி நிலையத்தின் செயல்பாடு முடிவாகுமென MBPP கூறியது.
வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக, உணவகங்களின் தூய்மையை எப்போதும் வலியுறுத்தி வருவதாக அது மேலும் கூறியது.